

கொலையான பெண் கமாண்டோ
புதுடெல்லி: டெல்லி காவல் துறையில் கமாண்டோவாக பணியாற்றி வந்த 4 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் தனது கணவரால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
டெல்லி காவல் துறையின் ஸ்வாட் கமாண்டோ பிரிவில் பணியாற்றி வந்தவர் காஜல் சவுத்ரி (27). இவரது கணவர் அங்குர், பாதுகாப்பு அமைச்சகத்தில் கிளார்க் ஆக பணியாற்றி வந்தார். கணவன் - மனைவி இடையே பண விவகாரத்தில் சண்டை, சச்சரவு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 22-ம் தேதி இத்தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த அங்குர், உடற்பயிற்சி செய்ய பயன்படுத்தும் டம்பிள்ஸை எடுத்து காஜலின் தலையில் தாக்கியுள்ளார்.
இதில் தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காஜல், சிகிச்சை பலனின்றி கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
காஜலின் சகோதரர் நிகில், டெல்லி நாடாளுமன்ற தெரு காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து அவர் கூறும்போது, “காஜல் என்னுடன் போனில் பேசிக்கொண்டிருந்தபோது அவரை டம்பில்ஸ் மூலம் அங்குர் தாக்கத் தொடங்கினார். காஜலின் மாமியார் மற்றும் இரண்டு நாத்தனார்களும் வரதட்சணை கேட்டு அவரை தொடர்ந்து துன்புறுத்தி வந்தனர்’’ என்றார்.
காஜலின் தந்தை கூறும்போது, ‘‘எனது மகள் 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். தாயும் வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்துவிட்டனர். அங்குர் ஒன்று அல்ல, இரண்டு கொலைகளைச் செய்துள்ளான்” என்றார்.
காஜல் கடந்த 2022-ல் டெல்லி காவல் துறையில் பணியில் சேர்ந்தார். 2023-ல் டெல்லி கண்டோன்மென்ட்டில் பணிபுரிந்த அன்குரை மணந்தார். இந்தத் தம்பதியருக்கு ஒன்றரை வயது மகன் இருக்கிறான்.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக அங்குர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.