

பிரதிநிதித்துவப் படம்
மும்பை: அமெரிக்க பெண்ணிடம் 400 மீட்டர் தூர பயணத்துக்கு ரூ.18,000 வசூலித்த மும்பை கார் ஓட்டுநர் தேஷ்ராஜ் யாதவ் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவை சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஆரினோ அண்மையில் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினார். அங்கிருந்து ஹில்டன் நட்சத்திர ஓட்டலுக்கு செல்ல வாடகை காரை முன்பதிவு செய்தார்.
மும்பை விமான நிலையத்துக்கும் நட்சத்திர ஓட்டலுக்கும் இடையிலான தொலைவு 400 மீட்டர் ஆகும். ஆனால் கார் ஓட்டுநர் தேஷ்ராஜ், ஆரினோவை அந்தேரி கிழக்கு பகுதிக்கு அழைத்துச் சென்றார். சுமார் 20 நிமிடங்கள் ஆங்காங்கே காரில் சுற்றி திரிந்தார். இறுதியாக நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார். இதற்காக அவரிடம் ரூ.18,000 கட்டணம் வசூலித்தார்.
இதன்பிறகு நட்சத்திர ஓட்டல் ஊழியர்களிடம், வாடகை கார் கட்டணம் குறித்து ஆரினோ கேட்டறிந்தார். அப்போதுதான் கார் ஓட்டுநர் தேஷ்ராஜ் தன்னை ஏமாற்றியிருப்பது அவருக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.
அதில், ‘‘நான் இந்தியாவை நேசிக்கிறேன். இந்திய உணவு வகைகளை விரும்புகிறேன். ஒரு திருமணத்தில் பங்கேற்பதற்காக மும்பை வந்தேன். ஆனால் கார் ஓட்டுநர் என்னை திட்டமிட்டு ஏமாற்றிவிட்டார். இதுபோன்ற சில திருடர்களால் இந்தியாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது’’ என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும் காரின் பதிவெண் புகைப்படத்தையும் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
அமெரிக்க பெண்ணின் சமூக வலைதள பதிவு வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து மும்பை போலீஸார் விசாரணை நடத்தி கார் ஓட்டுநர் தேஷ்ராஜை (50) கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநரின் உரிமத்தை ரத்து செய்ய ஆர்டிஓ அலுவலகத்துக்கு பரிந்துரை செய்துள்ளோம். அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தனர்.