மேலூர் அருகே ஆம்னி, அரசு பேருந்துகள் மோதி விபத்து: 5 பயணிகள் உயிரிழப்பு

40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
மேலூர் அருகே ஆம்னி, அரசு பேருந்துகள் மோதி விபத்து: 5 பயணிகள் உயிரிழப்பு
Updated on
1 min read

மதுரை: மேலூர் அருகே கொட்டாம்பட்டி நான்கு வழி சாலையில் இன்று அதிகாலை இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்ட கோர விபத்தில் 5 பயணிகள் உயிரிழந்துள்ளனர். சுமார் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி பயணிகளுடன் ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே வஞ்சி நகரம் நான்குவழிச் சாலையில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து, எதிர்திசையில் மதுரையில் இருந்து திருச்சி நோக்கி பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

மேலும், எதிர்திசையில் அரசு பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதிய நிலையில், இடது பக்க சாலையில் திரும்பி, சாலையோரம் இருந்த பேருந்து பயணிகள் நிழற்குடையில் மோதியது.

விபத்து குறித்து தகவலறிந்த கொட்டாம்பட்டி போலீசார், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, இரு பேருந்துகளிலும் சிக்கிய பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த சிறிய புஷ்பம் (56), திருச்சி எடமலைப்பட்டி ஆனந்த ராஜ் (46), திருச்சி காவல்துறை குடியிருப்பு காலனி சூர்யா (29), திருவாரூர் முகமது யாசின் (60), திசையன்விளை ஆபிரகாம் (40) ஆகிய 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் இரு பேருந்திலும் பயணித்த 41 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மேலூர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடைபெற்ற இடத்தை மதுரை சரக டி.ஐ.ஜி அபிநவ் குமார், மதுரை எஸ்.பி தேவநாதன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தால் கொட்டாம்பட்டி பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

மேலூர் அருகே ஆம்னி, அரசு பேருந்துகள் மோதி விபத்து: 5 பயணிகள் உயிரிழப்பு
‘அன்பே டயா​னா’ படத்​தில் ஆங்கிலோ - இந்​திய சமூக வாழ்க்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in