

சென்னை: அடையாறு பகுதியில் சாக்கு மூட்டையில் வடமாநில இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை அடையார், இந்திரா நகரில் பிரபலமான பைக் ஷோரூம் ஒன்று உள்ளது. இதன் அருகில் நேற்று காலை 7.30 மணியளவில் சாக்கு மூட்டை (கோணிப்பை) ஒன்று கேட்பாரற்ற நிலையில் கிடந்தது.
இதை அப்பகுதி மக்கள் அருகில் சென்று பார்த்தபோது அதிலிருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. இதுகுறித்து அவர்கள் உடனடியாக போலீஸில் புகார் தெரிவித்தனர்.
அடையாறு போலீஸார் வந்து சாக்கு மூட்டையை அவிழ்த்து பார்த்தபோது தலையில் 3 வெட்டுக் காயங்கள் மற்றும் முகத்தில் கையால் அடித்த சிறு ரத்தக் காயத்துடன் 35 வயதுடைய வட மாநில இளைஞர் ஒருவரின் சடலம் அதில் இருந்தது.
அதை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட இளைஞர்யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர், எதற்காக எங்கு கொலை நடந்தது, கொலையாளிகள் யார் என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்டமாக சம்பவ இடம், அதைச் சுற்றி பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.