

ஊட்டி: நீலகிரி மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை ‘வாட்ஸ்-அப் ப்ரொஃபைல்’ படமாக வைத்து பணம் மோசடி செய்ய நடந்த முயற்சி குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் சிலருக்கு. ஆட்சியர் லட்சுமி பவ்யாவின் புகைப்படத்தை ப்ரொஃபைல் படமாக கொண்ட வாட்ஸ்அப் எண்ணில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது.
அதில், ‘எனது வங்கிக் கணக்கில் பிரச்சினை இருப்பதால் உடனடியாக பணம் அனுப்ப முடியவில்லை, நீங்கள் பணம் அனுப்பி உதவி செய்தால், என் வேலை முடிந்ததும் உங்களுக்கு மீண்டும் பணம் அனுப்புகிறேன்’ என்று ஆட்சியர் கூறுவது போல இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் ஆட்சியருக்கு தகவல் தெரிவித்தனர். ஆட்சியர் தரப்பில் வந்த புகாரின்பேரில், சைபர் கிரைம் போலீஸார் விசாரிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா உத்தரவிட்டார்.
முதல்கட்டமாக, இந்தப் போலி வாட்ஸ் அப் கணக்கு விர்ச்சுவல் நம்பர் முறையில் தாய்லாந்தில் தொடங்கப்பட்டு இருப்பதாகவும், இந்த மோசடி ‘பாஸ் கிரைம்’ என்பதும் தெரியவந்தது.
அதாவது, ஒரு அதிகாரியின் கீழ் பணியாற்றுபவர்களுக்கு, அதிகாரியின் பெயரை பயன்படுத்தி, போலியாக படத்தை வைத்து பண மோசடி செய்யும் முயற்சி ஆகும்.
இதுபோன்று ஏற்கெனவே பல மாவட்ட ஆட்சியர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி போலி வாட்ஸ் அப் கணக்குகளை உருவாக்கி பணம் பறிக்க முயற்சி நடைபெற்ற நிலையில், தற்போது நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா புகைப்படத்துடன் போலி வாட்ஸ்-அப் கணக்கு உருவாக்கி மோசடி செய்ய முயற்சி செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, தனது பெயரில் பணம் கேட்டால் யாரும் அனுப்ப வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யாதனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.