Published : 29 Apr 2023 06:08 AM
Last Updated : 29 Apr 2023 06:08 AM

திருப்பூரில் தாறுமாறாக ஓடிய லாரியால் விபத்து: கோயில் பூசாரி உயிரிழப்பு; வாகனங்கள் நொறுங்கி சேதம்

திருப்பூர்: திருப்பூர் மாநகரில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்து ஏற்படுத்திய விறகு ஏற்றி வந்த லாரியால், கோயில் பூசாரி உயிரிழந்தார். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

திருப்பூர் மாநகர போக்குவரத்தில் பிரதான சாலையாக இருப்பதுகுமரன் சாலை. தொழில் நகரமாக இருப்பதால், போக்குவரத்து போலீஸார் சார்பில் கனரக வாகனங்கள் மாநகர எல்லைக்குள் வருவதற்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குமரன் சாலையில் விறகு ஏற்றி வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் சென்று கொண்டிருந்த இருசக்கரவாகனம், சாலையில் நின்றிருந்த இருசக்கர வாகனம், கார், சரக்கு வாகனங்கள், சிற்றுந்து உள்ளிட்டவை மீது தாறுமாறாக மோதியதில் மக்கள் பீதி அடைந்தனர்.

லாரியில் பிரேக் பிடிக்காததால் பலர் மீது மோதியதால், மக்கள்கூச்சலிட்டு சிதறி ஓடினர். எம்.ஜி.ஆர்.சிலை சிக்னலை கடந்து லாரி நிறுத்தப்பட்டது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட தகவலின்பேரில் வடக்கு போலீஸார் சென்று போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

திருப்பூர் - காங்கயம் சாலையை சேர்ந்த கோயில் பூசாரிகண்ணன் (46), லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல சாலையில் சென்றஆண்டிச்சாமி உட்பட 4 பேர் காயமடைந்தனர்.

உடனடியாக போக்குவரத்தை சீரமைக்க முடியாததால், கடும்போக்குவரத்து நெரிசல் மற்றும்பீதியால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

இதைத்தொடர்ந்து சடலத்தை போலீஸார் மீட்டு திருப்பூர் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். லாரியை ஓட்டி வந்த மதுரையைச் சேர்ந்த முருகன் (47) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக அவரிடம் விசாரித்தபோது, "சிவகங்கை மாவட்டத்தில் இருந்து திருப்பூர் சாய ஆலைக்கு விறகு ஏற்றிக்கொண்டு வந்தபோது, லாரி பிரேக் பிடிக்காததால் விபத்து நிகழ்ந்தது" என்றார். இதையடுத்து வடக்கு போலீஸார் வழக்கு பதிந்து முருகனை கைது செய்தனர்.

திருப்பூரை சேர்ந்த ஆர்.வி.சுப்பிர மணியன் கூறும்போது, "திருப்பூர் குமரன் சாலை மாநகரின் பிரதான சாலை. பகல் நேரத்தில் இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் செல்லவே சிரமப்படும் சூழலில், விறகு பாரம் ஏற்றப்பட்ட லாரியை போக்குவரத்து போலீஸார் அனுமதித்துள்ளனர்.

காலை மற்றும் இரவு நேரங்களில் மட்டுமே கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி வாகனம் இயக்கப்பட்டதால் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x