Last Updated : 25 Apr, 2023 04:49 PM

1  

Published : 25 Apr 2023 04:49 PM
Last Updated : 25 Apr 2023 04:49 PM

மதுரையில் ஜல்லிக்கட்டு ஆர்வலர் தற்கொலை: போலீஸ் விசாரணை

ஜல்லிக்கட்டு ஆர்வலர் சி.ஆர்.கார்த்திக்.

மதுரை: மதுரையில் ஜல்லிக்கட்டு ஆர்வலர் ஒருவர் தன்னுடைய கையை அறுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகன் சிஆர்.கார்த்திக் (35). ஜல்லிக்கட்டு ஆர்வலரான இவர், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையிலும் நிர்வாகியாக இருந்தார். 10 ஜல்லிக்கட்டு காளைகளும் வளர்த்தார். இவருக்கு திருமணம் ஆகி 6 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில், குடும்பப் பிரச்சினையால் விரக்தியில் இருந்த அவர் தனக்கு தானே உடலில் சிறு காயங்களை ஏற்படுத்திக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கடந்த வாரம் வீட்டிலுள்ள டிவி ஸ்டாண்டு, கண்ணாடியை உடைத்துள்ளார். அவருக்கு கை உள்ளிட்ட இடங்களில் காயமடைந்து ரத்தம் கொட்டியது. இதைத்தொடர்ந்து அவர் வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது பற்றி தகவல் அறிந்த அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பார்த்திபன் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம், அபிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது தந்தை ராமமூர்த்தி கொடுத்த புகாரின்பேரில் அவனியாபுரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

போலீஸ் தரப்பில் கூறுகையில், ''மது குடிக்கும் பழக்கத்திற்கு கார்த்திக் அடிமையாகி இருந்துள்ளார். போதையில் சுவரில் தலை கொண்டு மோதுவது, வீட்டிலுள்ள உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். கடந்த வாரம் கண்ணாடிகளை உடைத்த கையில் அறுத்துக்கொண்டதாக தெரிகிறது. இதன்மூலம் அதிகளவில் ரத்தம் வெளியேறி இருக்கிறது. பலவீனமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். ஆனாலும், சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரிக்கிறோம்'' என்றனர்.

இதற்கிடையில், கார்த்திக் தந்தை ராமமூர்த்தி ஓபிஎஸ் அணியில் அமைப்புச் செயலராக இருப்பதால், தகவல் அறிந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்து, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

| தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம். |

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x