Published : 15 Apr 2023 06:25 AM
Last Updated : 15 Apr 2023 06:25 AM

வாடிப்பட்டியில் தகராறை விலக்கி விட்ட இளைஞர் கொலை: பெண்கள் உட்பட 8 பேரை தேடும் போலீஸ்

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே இளைஞரை அடித்துக் கொன்ற சம்பவம் தொடர்பாக பெண்கள் உட்பட 8 பேரை போலீஸார் தேடுகின்றனர்.

வாடிப்பட்டி அருகே பெருமாள்பட்டி சேர்வைக்கார தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவரது மகன் மணிகண்டன் ( 26). பள்ளபட்டி தொழில்பேட்டையில் பெல்ட் நிறுவனத்தில் வேலை செய்தார். திருமணம் ஆகவில்லை.

கடந்த ஏப். 9-ம் தேதி பெருமாள்பட்டி மந்தையில் மணிகண்டனின் மாமா மகன் ஆனந்தகுமார், அதே ஊரைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் ஜீவா ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கு சென்ற மணிகண்டன், உறவினர் என்ற முறையில் தகராறை விலக்கி விட்டுள்ளார். இதுதொடர்பாக, ஜீவாவுடன் பிரச்சினை ஏற்பட்டது.

இந்நிலையில், ஏப். 10-ம் தேதி பெருமாள்பட்டி நடுநிலைப் பள்ளி அருகே மணிகண்டன் நின்றிருந்தார். அப்போது அவருடன் ஜீவா, அவரது தந்தை ராமமூர்த்தி மற்றும் அவரது தரப்பினர் தகராறு செய்து கட்டை, கம்பியால் தாக்கியதில் மணிகண்டன் பலத்த காயமடைந்தார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மணிகண்டன் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக ஜீவா, அவரது தந்தை ராமமூர்த்தி, லலிதா, ராஜசேகர், சூரியகலா, சரண்யா, சரத், அஜித் ஆகிய 8 பேரை வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் நித்ய பிரியா மற்றும் போலீஸார் தேடுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x