Last Updated : 12 Apr, 2023 06:48 PM

 

Published : 12 Apr 2023 06:48 PM
Last Updated : 12 Apr 2023 06:48 PM

தென்காசி இளம்பெண் நேரில் ஆஜராக மறுப்பு: பெற்றோர் உட்பட 6 பேரின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

மதுரை: காதல் திருமணம் செய்ததால் கடத்தப்பட்ட இளம்பெண் நீதிமன்றத்தில் ஆஜராக மறுத்ததால் பெற்றோர் உட்பட 6 பேரின் முன்ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தென்காசியை சேர்ந்த இளம்பெண் குருத்திகா பட்டேல். இவரை காதல் திருமணம் செய்து கொண்டதற்காக அவரது உறவினர்கள் கடத்தினர். இது தொடர்பாக குருத்திகாவின் நண்பர் மாரியப்பன் வினித் அளித்த புகாரின் பேரில் குருத்திகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என 12 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவர்கள் ஜாமீன், முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கியும், முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், குருத்திகாவின் தந்தை நவீன் பட்டேல், தாய் தர்மிஸ்தா பட்டேல், கிருத்திகா 2-வது திருமணம் செய்ததாக கூறப்படும் மைத்திரிக், உறவினர்கள் விஷால், கீர்த்தி பட்டேல் மற்றும் சண்முகராஜ் ஆகியோர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது கடத்தல் வழக்கின் தற்போதைய நிலை குறித்து குருத்திகாவிடம் நேரில் விசாரிக்க வேண்டியதுள்ளது. அதற்காக அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த மனுக்கள் நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. கூடுதல் அரசு வழக்கறிஞர் ஆர்.எம்.அன்புநிதி வாதிடுகையில், ''இளம்பெண் கடத்தல் வழக்கில் மனுதாரர்களுக்கு தொடர்புள்ளது. அதற்கு வீடியோ ஆதாரங்கள் உள்ளன. மனுதாரர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியதுள்ளது. இதனால் மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது'' என்றார். மாரியப்பன் வினித் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிடுகையில், ''குருத்திகாவை அவரது பெற்றோர் ஆணவக் கொலை செய்ய வாய்ப்புள்ளது. மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது'' என்றார்.

குருத்திகா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், ''குருத்திகா தற்போது குஜராத்தில் உள்ளார். இங்கு வந்தால் மாரியப்பன் வினித் மற்றும் அவரது குடும்பத்தினரால் அவர் கடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதனால் குருத்திகா காணொலி காட்சி வழியாக நீதிமன்றத்தில் ஆஜராக அனுமதி அளிக்க வேண்டும்'' என்றார். இதையேற்க மறுத்த நீதிபதி, ''இந்த வழக்கு முக்கியமான வழக்கு. முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ள குருத்திகாவின் பெற்றோர் மற்றும் 2-வது கணவர் எங்கு உள்ளனர்'' என கேள்வி எழுப்பினார். அதற்கு மனுதாரர்கள் வழக்கறிஞர்கள், ''மனுதாரர்கள் தமிழகத்தில் தான் உள்ளனர்'' எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி, ''பெற்றோர், இரண்டாம் கணவர் தமிழகத்தில் இருக்கும் போது, குருத்திகாவை ஏன் அழைத்துவரவில்லை. ஆணவக் கொலை செய்வதற்காக குருத்திகாவை குஜராத்திற்கு அழைத்துச் சென்றுள்ளீர்கள் என சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இதனால் குருத்திகா காணொலி காட்சி வழியாக ஆஜராக அனுமதிக்க முடியாது. இந்த வழக்கில் சாட்சியங்களை கலைக்க வாய்ப்புள்ளது. இதனால் மனுதாரர்களின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. போலீஸார் மனுதாரர்களை கைது செய்து விசாரணை நடத்தலாம்'' என உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x