Published : 29 Mar 2023 07:35 AM
Last Updated : 29 Mar 2023 07:35 AM

நாகர்கோவில் | ஆபாச வீடியோ வெளியானதால் சர்ச்சை: குமரி பாதிரியாரிடம் சைபர் போலீஸ் விசாரணை

நாகர்கோவில்: ஆபாச வீடியோ வெளியான சர்ச்சையை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள குமரி பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை நேற்று சைபர் கிரைம் போலீஸார் ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது வீடியோக்களில் தன்னுடன் இருக்கும் பெண்களுடனான நட்பு குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ(29). பிலாங்காலையில் உள்ள தேவாலயத்தில் பணியாற்றி வந்தார். இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுடன் இவர் நெருக்கமாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

பாதிக்கப்பட்ட நர்சிங் மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் பெனடிக்ட் ஆன்றோ கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பாதிரியாரை காவலில் எடுத்து விசாரிக்க நாகர்கோவில் நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீஸார் மனுத்தாக்கல் செய்தனர். ஒரு நாள் மட்டும் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. பாளையங்கோட்டை சிறையில் இருந்து பாதிரியாரை, சைபர் கிரைம் போலீஸார் நேற்று நாகர்கோவிலுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

பாதிரியாரிடமிருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப், செல்போன்களில் உள்ள ஆபாச வீடியோ, சாட்டிங் படங்களில் இருந்த பெண்களின் விவரம், அவர்களுடனான தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

மீண்டும் சிறையில் அடைப்பு: போலீஸாரின் கேள்விகளுக்கு தயக்கமின்றி பதிலளித்த பாதிரியார், பெண்களுடன் தனக்கு நெருங்கிய நட்பு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தெரிவித்துள்ளார். விசாரணைக்கு பின்னர் நேற்று மாலை மீண்டும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் பெனடிக்ட் ஆன்றோவை போலீஸார் ஆஜர்படுத்தினர். பின்னர் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x