Published : 22 Mar 2023 07:30 AM
Last Updated : 22 Mar 2023 07:30 AM

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டிலில் 4 ஆண்டுகளாக திருடி சோழிங்கநல்லூரில் ரூ.95 லட்சத்துக்கு வீடு வாங்கிய பணிப்பெண்

ஈஸ்வரி, வெங்கடேசன்

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மகள் வீட்டில்4 ஆண்டுகளாக தங்க, வைர நகைகளைத் திருடி விற்று சோழிங்கநல்லூரில் ரூ.95 லட்சத்துக்கு வீடு வாங்கிய பணிப்பெண் மற்றும் அவருக்கு உதவிய கார் டிரைவரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை போயஸ் கார்டன் ராகவீரா அவென்யூ சாலையில் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்(41) வசித்து வருகிறார். இவர், தனது வீட்டில் லாக்கரில் வைத்திருந்த தங்க, வைர நகைகளைக் காணவில்லை என்று தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த மாதம் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில், 2019-ம் ஆண்டு தனது தங்கை திருமணத்துக்குப் பிறகு தனி லாக்கரில் வைக்கப்பட்ட நகைகளை அதன்பிறகு அவர் திறந்து பார்க்கவில்லை என்றும், ஆழ்வார்ப்பேட்டை செயின்ட் மேரிஸ் சாலை, சிஐடி நகர், போயஸ் கார்டன் என 3 வீடுகளில் லாக்கர் மாறி மாறி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், தனதுவீட்டு பணிப்பெண்களான ஈஸ்வரி,லட்சுமி, கார் டிரைவர் வெங்கடேசன் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து,ஐஸ்வர்யா வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்கள், கார் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஐஸ்வர்யா வீட்டில் பணியாற்றி வந்த ஈஸ்வரி என்பவரின் வங்கிக் கணக்கில் லட்சக்கணக்கில் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது போலீஸாருக்கு தெரியவந்தது.

இதனால், சந்தேகம் அடைந்த போலீஸார், மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரி(40), அவரதுகணவர் அங்கமுத்து ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீஸார் கூறுகையில், ``ஐஸ்வர்யா வீட்டில் 18 ஆண்டுகளாக வேலை செய்து வந்த ஈஸ்வரி, நகை இருக்கும் லாக்கரின் சாவியை ஐஸ்வர்யா எங்கு வைப்பார் என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறார். முதலில் சிறிதளவு நகைகளை லாக்கரில் இருந்து திருடியுள்ளார். இதை ஐஸ்வர்யா வீட்டில்யாரும் கவனிக்காமல் இருந்துள்ளனர்.

இதையடுத்து, திருவேற்காடு மனசுரா கார்டனை சேர்ந்த கார்ஓட்டுநர் வெங்கடேசன்(44) உதவியுடன் ஈஸ்வரி கொஞ்சம், கொஞ்சமாக லாக்கரில் இருந்த நகைகளைத் திருடியுள்ளார். இது 4 ஆண்டுகளாகத் தொடர்ந்துள்ளது. இதற்கிடையில், கடந்த 2019-ம் ஆண்டு வங்கியிலிருந்து கடன் வாங்கி சோழிங்கநல்லூரில் ரூ.95லட்சத்துக்கு ஈஸ்வரி வீடு வாங்கியிருக்கிறார். மேலும், அந்த கடனை 2 ஆண்டுகளிலேயே அவர் அடைத்துள்ளார்.

இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஈஸ்வரி தாமாகவே வேலையை விட்டு நின்றுள்ளார். அதன் பிறகுதான் ஐஸ்வர்யா லாக்கரை திறந்து பார்த்தபோது நகைகள் மாயமாகி இருந்தது தெரிந்து போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்'' என போலீஸார் தெரிவித்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்: இதையடுத்து பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் வெங்கடேசனை போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து சுமார் 100 பவுன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டுப் பத்திரத்தை பறிமுதல் செய்தனர். மேற்கொண்டு அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பிறகு அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதாக போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x