Published : 13 Mar 2023 06:42 AM
Last Updated : 13 Mar 2023 06:42 AM

திருப்பூர் | வட மாநில தொழிலாளர் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய பிஹார் இளைஞர் கைது

திருப்பூர்: திருப்பூரில் வட மாநில தொழிலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வதந்தி பரப்பிய பிஹாரை சேர்ந்த இளைஞரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூரில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது திருப்பூர் மாநகர போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சைபர் கிரைம் ஆய்வாளர் ஐ.சொர்ணவள்ளி தலைமையிலான தனிப்படையினர் சமூக வலைதளங்களை கண்காணித்து, உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பியவர்கள் குறித்த விவரங்களை சேகரித்தனர்.

இதில், பிரசாந்த் குமார்(32) என்பவரது முகநூல் பக்கத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக தவறான செய்தி பகிரப்பட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக கடந்த 8-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் பிரசாந்த்குமார், பிஹார் மாநிலம் வைசாலி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், ஜார்க்கண்ட் மாநிலம் லேட்டஹர் மாவட்டம் ஹெகிகாரா கிராமத்தில் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, பிரசாந்த்குமாரை காவல் ஆய்வாளர் ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை போலீஸார் கைது செய்து, லேட்டஹர் மாவட்ட நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தினர்.

பின்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரணைக்காக அவரை நேற்று திருப்பூர் அழைத்து வந்தனர். குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்திய பிறகு, பிரசாந்த்குமாரை சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x