Published : 11 Mar 2023 06:50 AM
Last Updated : 11 Mar 2023 06:50 AM

சென்னை | 89 ஆயிரம் பேரிடம் ரூ.1,000 கோடி மோசடி: ஹிஜாவு நிறுவன இயக்குநர்கள் 2 பேர் சரண்

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் செயல்பட்டு வந்த ஹிஜாவு அசோசியேட்ஸ் என்ற நிறுவனம், பல்வேறு தொழில்களை செய்து வருவதாகவும், தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 15 சதவீத வட்டி வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் என்றும் கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டது. இதை நம்பி ஏராளமானோர் அந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தனர்.

ஆனால், அறிவித்தபடி அந்த நிறுவனம் வட்டித் தொகையை கொடுக்கவில்லை. முதலீடு செய்த பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட சுமார் 89 ஆயிரம் பேர், ரூ.1,000 கோடி வரை பணத்தை இழந்ததாக கூறி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, அந்நிறுவனம் தொடர்புடைய 32 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில், பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதையடுத்து அந்த நிறுவனத்தில் தொடர்புடைய சென்னை பெரியார் நகரை சேர்ந்த நேரு, கோடம்பாக்கம் மணிகண்டன் ஆகிய 2 பேர் கடந்த டிசம்பர்மாதமும், திருவேற்காடு சாந்தி பாலமுருகன், விருகம்பாக்கம் கல்யாணி, அண்ணாநகர் சுஜாதா பாலாஜி ஆகிய 3 பேர் பிப்ரவரி மாதமும் கைது செய்யப்பட்டனர். நிர்வாகிகளில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில், அந்நிறுவனத்தின் இயக்குநர் சவுந்தரராஜன் அண்மையில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த ஹிஜாவு நிறுவன இயக்குநர்களான கொளத்தூரைச் சேர்ந்த செல்வம், சுரேஷ் ஆகிய 2 பேரும் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர். அவர்கள் இருவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார், தங்களது காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x