Published : 24 Feb 2023 04:00 AM
Last Updated : 24 Feb 2023 04:00 AM

திருப்பூரில் பிஹார் இளைஞர் கொலை வழக்கில் தப்பியவர் ஜார்க்கண்டில் கைது

திருப்பூர்: ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தம்பதி உபேந்தரதாரி (48), சித்ரா தேவி. இவர்களுக்கு 3 குழந்தைகள். திருப்பூர் நெசவாளர் காலனியில் குடும்பத்துடன் தங்கி ஓட்டுநர் வேலைக்கு உபேந்தரதாரி சென்று வந்தார்.

இந்நிலையில், பிஹார் மாநிலத்தை சேர்ந்த பவன் யாதவ் (27), மனைவியுடன் அதே பகுதியில் வசித்து வந்தார். ஒரே பகுதியில் வசித்து வந்ததால், பவன் யாதவுடன் மனைவி சித்ரா தேவிக்கு பழக்கம் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், மனைவியிடம் அடிக்கடி உபேந்தரதாரி பிரச்சினையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடந்த 18-ம் தேதி மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட அவர், அதே பகுதியில் வசித்து வந்த பவன் யாதவை சரமாரியாக வெட்டி விட்டு தப்பினார். படுகாயமடைந்த பவன் யாதவ், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், சிகிச்சை பலனின்றி கடந்த 19-ம் தேதி உயிரிழந்தார்.

இது தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீஸார் வழக்கு பதிந்து, உபேந்தரதாரியை தேடி வந்தனர். சொந்த மாநிலத்துக்கு சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், திருப்பூர் வடக்கு போலீஸின் தனிப் படை அங்கு விரைந்தது. ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் நகரில் உபேந்தரதாரியை கைது செய்தனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் பவன் யாதவை கொன்றதாக போலீஸாரிடம் உபேந்தரதாரி தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், கொலை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x