Published : 09 Feb 2023 06:55 AM
Last Updated : 09 Feb 2023 06:55 AM

கூடங்குளம் அருகே நடுக்கடலில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி மீனவர்கள் கடும் மோதல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே நடுக்கடலில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி மீனவர்கள் கடும் மோதலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக இடிந்தகரையைச் சேர்ந்த 37 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா கடலில் தென்பகுதியில் மீன்பிடிப்பது தொடர்பாக, திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரை நாட்டுப்படகு மீனவர்களுக்கும், கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்களுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.

சின்னமுட்டம் சமாதானராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 13 மீனவர்கள் நேற்று இடிந்தகரையிலிருந்து 8 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இதுகுறித்து தெரியவந்ததும் இடிந்தகரை மீனவர்கள் 30-க்கும் மேற்பட்டோர் 12 நாட்டுப் படகுகளில் சென்று சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்களைச் சுற்றிவளைத்தனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒரு தரப்பினர் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ பதிவை சின்னமுட்டம் மீனவர்கள் கன்னியாகுமரி மாவட்ட கடலோர காவல் குழும போலீஸாருக்கு அனுப்பி புகார் செய்தனர். பின்னர், கூடங்குளம் கடலோர காவல்படை போலீஸாரிடமும் மனு அளித்தனர். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி இடிந்தகரையைச் சேர்ந்த மீனவர்கள் 37 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதனிடையே இடிந்தகரை மீனவர்களும் கூடங்குளம் கடலோர காவல்படை போலீஸில் புகார் தெரிவித்துள்ளனர். அது தொடர்பாகவும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோதலில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x