Published : 24 Jan 2023 04:09 PM
Last Updated : 24 Jan 2023 04:09 PM

‘துணிவு’ பாணியில் துணிகரம்: திண்டுக்கல் வங்கியில் கொள்ளை முயற்சி - ஒருவர் கைது

கொள்ளை முயற்சி நடந்த வங்கி

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பட்டப்பகலில் வங்கியில் புகுந்த மர்ம நபர் ஊழியர்கள் மீது மிளகாய் பொடி கலந்த தண்ணீரை ஸ்ப்ரே செய்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது. அந்த மர்ம நபரை பொதுமக்கள் உதவியுடன் வங்கி ஊழியர்கள் சுற்றிவளைக்க பின்னர் போலீஸார் அவரை கைது செய்தனர்.

திண்டுக்கல் - தாடிக்கொம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. வங்கியில் இன்று (24.01.2023) காலை நான்கு பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உள்ளே வந்த மர்ம நபர் ஒருவர் கையில் மிளகாய் பொடி, ஸ்ப்ரே, கட்டிங் பிளேடு உட்பட ஆயுதங்களை எடுத்தார். அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் மீது மிளகாய் பொடி தூவி ஸ்ப்ரே அடித்துள்ளார். பின்னர் தான் கொண்டு வந்த கயிற்றால் வங்கி ஊழியர்கள் 3 பேரின் கைகளைக் கட்டிப்போட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்றார். அப்போது எஞ்சியிருந்த வங்கி ஊழியர் ஒருவர் வெளியே ஓடி வந்து பொதுமக்களை பார்த்து 'கொள்ளை, கொள்ளை' எனக் கூச்சலிட்டுள்ளார்.

பின்னர் பொதுமக்கள் வங்கியின் உள்ளே சென்றனர். பொதுமக்கள் உதவியுடன் குற்றவாளியைப் பிடித்தனர். இதனையடுத்து திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மர்ம நபரை பிடித்து விசாரித்ததில் திண்டுக்கல் பூச்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த கலீல் ரகுமான் (வயது 25) என்பது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளையடிக்க முயன்ற கலீல் ரகுமானை திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸார் விசாரணையில் வாழ்க்கை வெறுத்து விட்டதாகவும், அதனால் சினிமாவை பார்த்து தான் கொள்ளையடிக்க முயற்சி செய்ததாகவும், தற்போது வந்துள்ள ‘துணிவு’ படம் உட்பட அனைத்து படங்களையும் பார்த்துக் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். பகல் நேரத்தில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் சாலையில் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்ததால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x