Last Updated : 16 Dec, 2022 11:51 PM

1  

Published : 16 Dec 2022 11:51 PM
Last Updated : 16 Dec 2022 11:51 PM

பாஜக நிர்வாகி கொலையில் தவறுதலாக கைதானவர்களுக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: பரமக்குடி நகர பாஜக செயலாளர் கொலை வழக்கில் தவறுதலாக கைது செய்யப்பட்ட இருவருக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பரமக்குடியைச் சேர்ந்த ராஜாமுகமது, மனோகரன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "பரமக்குடி நகர பாஜக செயலாளர் முருகன் என்ற முருகேசன், கடந்த 19.3.2013-ல் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பரமக்குடி காவல் ஆய்வாளர் ரத்னகுமார் எங்களை தவறுதலாக கைது செய்து சிறையில் அடைத்தார். பின்னர் எங்களை நீதிமன்றம் விடுதலை செய்தது.

இருப்பினும் எந்த குற்றமும் செய்யாமல் இருவரும் நீண்ட நாட்கள் சிறையில் இருந்துள்ளோம். இதனால் எங்கள் கைதுக்கு காரணமாக காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், எங்களுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி, "மனுதாரர்கள் உள்நோக்கத்துடன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் இருவரின் குடும்பங்கள் மிகப்பெரிய அவமானம் மற்றும் இழப்பை சந்தித்துள்ளது. காவல் ஆய்வாளர் ரத்னகுமார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு 16 வாரத்தில் ராஜாமுகமதுவுக்கு ரூ.10 லட்சம், மனோகரனுக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த இழப்பீடு தொகையை தற்போது தர்மபுரி மாவட்டத்தில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் ரத்னகுமாரிடம் திரும்ப வசூலித்துக்கொள்ளலாம்" இவ்வாறு உத்தரவு பிறப்பித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x