Published : 01 Dec 2022 11:57 PM
Last Updated : 01 Dec 2022 11:57 PM

கோவை | பாரதியார் பல்கலைக்கழக வளாக விடுதியில் மாணவர் தற்கொலை

பிரதிநிதித்துவப் படம்

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாக விடுதியில் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகா, முக்கூடலை அடுத்த அமர்நாத் காலனியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் வில்லியம். இவரது மகன் பென்னிஸ்குமார் (24). இவர், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் விடுதியில் தங்கி வகுப்புக்குச் சென்று வந்தார். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் இவரது தாயார் மல்லிகா உயிரிழந்தார். அதிலிருந்து தாயார் நினைவாகவே மாணவர் பென்னிஸ்குமார் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், மாணவர் பென்னிஸ்குமார் உடல்நிலை சரியில்லை எனக்கூறி இன்று (டிச.1) மதியம் வகுப்புக்கு செல்லாமல் விடுதி அறையிலேயே இருந்துள்ளார். சக மாணவர்கள் வழக்கம் போல் வகுப்புக்குச் சென்றுவிட்டு, மாலை வந்து பார்த்த போது, அறையின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.

அவர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது, பென்னிஸ்குமார் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். மாணவர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது மாணவர் பென்னிஸ்குமார் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த வடவள்ளி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின் விசாரணையில்,‘ தாய் உயிரிழந்ததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்த பென்னிஸ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும், இதற்கு முன்னரே பென்னிஸ்குமார் ஒருமுறை தற்கொலைக்கு முயற்சித்ததும், பின்னர் குடும்பத்தினர் அவரை மீட்டு மனநல சிகிச்சை அளித்து படிக்க அனுப்பி வைத்ததும் தெரியவந்தது.

இதற்கிடையே, அறையில் மாணவர் பென்னிஸ்குமார் எழுதி வைத்த கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அதில்,‘ தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. தான் வீட்டில் வைத்து உயிரிழக்க விருப்பமில்லை என்பதால், இங்கு தற்கொலை செய்து கொள்வதாகவும், தனது உயிரிழப்புக்கும், பல்கலைக்கழகத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை,’’ என எழுதப்பட்டிருந்தாக போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x