Published : 29 Nov 2022 04:03 AM
Last Updated : 29 Nov 2022 04:03 AM

கிஷோர் கே சாமி மேலும் ஒரு வழக்கில் கைது

கோவை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது தொடர்பாக கிஷோர் கே.சாமியை போலீஸார் கைது செய்தனர்.

சென்னையை சேர்ந்தவர் கிஷோர் கே.சாமி. இவர் கடந்த அக்டோபர் 23-ம் தேதி கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, அமைதியை குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டதாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் கடந்த வாரம் சென்னையில் வேறு ஒரு வழக்கில் கிஷோர் கே.சாமி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கோவை வழக்கில் அவரை கைது செய்த கோவை மாநகர போலீஸார் அவரை கோவை 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வரும் 12-ம் தேதி வரை கிஷோர் கே.சாமியை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, அவரை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சரவணபாபு, போலீஸார் ஒருநாள் விசாரிக்க அனுமதி அளித்து நேற்று உத்தரவிட்டார்.

நண்பர்கள் கண்காணிப்பு: கார் சிலிண்டர் வெடிவிபத்து சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபினின் நண்பர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க கோவை போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, கோவை மாநகர போலீஸார், முபினுடன் பழகி வந்தவர்களின் விவரங்களை கடந்த சில தினங்களாக சேகரித்து வந்தனர்.

தெற்கு உக்கடம் பொன்விழா நகரை சேர்ந்த துணிக்கடையில் பணியாற்றி வரும் தொழிலாளி ஒருவர் உள்பட மூன்று பேர் முபினுடன் நெருங்கிப் பழகியது தெரியவந்தது. அவர்கள் மூவர் மற்றும் முபினின் நட்பு வட்டாரத்தில் இருந்த மேலும் இருவரையும் போலீஸார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். அவர்களின் வீடுகளிலும் விரைவில் சோதனை நடத்த போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x