Published : 18 Nov 2022 06:49 AM
Last Updated : 18 Nov 2022 06:49 AM

ஆவடி | மகன் உயிரிழந்த சோகத்தில் தம்பதி தற்கொலை

ஆவடி: ஆவடி அருகே பட்டாபிராமில் மகன் உயிரிழந்த சோகத்தில் தம்பதி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள பட்டாபிராம், ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர் (50). விவசாயி. இவரது மனைவி பூங்கொடி (44). இத்தம்பதியின் மகன் ஹரிஷ்(17), உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு டிசம்பரில் உயிரிழந்தார். இவரின் முதலாண்டு நினைவு நாள் அடுத்த மாதம் வர உள்ளது.

இதற்கிடையே மகன் உயிரிழந்ததால் மிகுந்த மன உளைச்சலில் தனசேகர்- பூங்கொடி தம்பதி இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், தனசேகரின் தாயார் பூங்காவனம் நேற்று காலை தனசேகர் வசிக்கும் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, அங்கு தனசேகர், பூங்கொடி இருவரும் வாயில் நுரை தள்ளியபடி உயிரிழந்து கிடந்ததும், அருகில் பூச்சி கொல்லி மருந்து பாக்கெட், குளிர்பான பாட்டில் ஆகியவை கிடந்ததும் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த பட்டாபிராம் போலீஸார் சம்பவ இடம் விரைந்து, தனசேகர், பூங்கொடி உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்து போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், மகன் உயிரிழந்த சோகத்தில் தனசேகர்- பூங்கொடி தம்பதி குளிர்பானத்தில் பூச்சி கொல்லி மருந்து கலந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x