புதுக்கோட்டை | கோயிலில் திருடியவர்களை பொதுமக்கள் தாக்கியதில் கடலூர் சிறுமி உயிரிழப்பு

புதுக்கோட்டை | கோயிலில் திருடியவர்களை பொதுமக்கள் தாக்கியதில் கடலூர் சிறுமி உயிரிழப்பு
Updated on
1 min read

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கோயிலில் திருடிக் கொண்டு ஆட்டோவில் தப்பிச் சென்றவர்கள் மீது கிராம மக்கள் தாக்கியதில் காயமடைந்த சிறுமி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளனூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள சில கிராமங்களில் உள்ள கோயில்களின் வெளிப் பகுதியில் இருந்த பித்தளைப் பொருட்களை திருடிக் கொண்டு, நவ.14-ம் தேதி மாலை ஒரு கும்பல் ஆட்டோவில் சென்றது. இதையறிந்த கிராம மக்கள் ஆட்டோவை விரட்டிச் சென்று, புதுக்கோட்டை மச்சுவாடிப் பகுதியில் மடக்கினர். மேலும், ஆட்டோவில் இருந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சத்தியநாராயணசாமி(48), இவரது மனைவி லில்லி புஷ்பா(38), மகள் கற்பகாம்பாள்(10) மற்றும் 3 மகன்கள் என 6 பேரையும் தாக்கினர்.

காயமடைந்த 6 பேரையும் கணேஷ் நகர் போலீஸார் மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இவர்களில் தலையில் காயமடைந்திருந்த சிறுமி கற்பகாம்பாள், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து, கணேஷ் நகர் போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். கோயில்களில் திருடியதாக அளிக்கப்பட்ட புகார் குறித்து கீரனூர், உடையாளிப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in