Published : 02 Nov 2022 07:41 AM
Last Updated : 02 Nov 2022 07:41 AM

கேரளாவில் காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் அடுத்தடுத்து திருப்பம் - காதலியை தொடர்ந்து தாய் உட்பட மேலும் 2 பேர் கைது

திருவனந்தபுரம்: காதலனுக்கு விஷம் கொடுத்து கொடூரமாகக் கொலை செய்த இளம்பெண் விவகாரத்தில் மர்ம முடிச்சுகள் அவிழ்ந்துள்ளன. இந்த வழக்கில் காதலியைத் தொடர்ந்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளாவின் பாறசாலை அருகில் உள்ள மூரியங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் ஷாரோன் ராஜ் (23). கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு படித்து வந்த இவர், ராமவர்மன்சிறைப் பகுதியைச் சேர்ந்த கிரீஸ்மா என்பவரை காதலித்து வந்தார்.

கடந்த 14-ம் தேதி காதலியின் வீட்டுக்கு ஷாரோன் சென்றார். அதன்பிறகு வீட்டுக்கு வந்தவர் திடீரென வாந்தி எடுத்து, மயங்கிவிழுந்தார். இதனைத் தொடர்ந்து ஜெயராஜ், தனது மகன் ஷாரோனை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழந்து கடந்த 25-ம் தேதி அவர் உயிர் இழந்தார்.

கடைசிவரை நம்பிய காதலன்: உடல்நிலை பாதிக்கப்பட்டபோது ஷாரோன், காதலி கிரீஸ்மாவிடம் பேசும் ஆடியோ ஒன்று இப்போது வைரல் ஆகி வருகிறது. அதில், "நீ கொடுத்த கசாயத்தைக் குடித்ததில் எனக்கு வாயில் புண் ஏற்பட்டுள்ளது. கல்லீரல், கிட்னியும் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்" என்று கூறுகிறார்.

அப்போதும் காதலி கிரீஸ்மா கல் நெஞ்சத்தோடு தான் வழக்கமாகக் குடிக்கும் கசாயத்தைதான் உனக்கும் தந்தேன் என்கிறார்.

ரத்த மாதிரிகள் சேகரிப்பு: மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்தபோது ஷாரோன்ராஜின் ரத்தமாதிரிகள் சோதிக்கப்பட்டதில் அவரது உடலில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. அவர் மாஜிஸ்திரேட்டிடம் கொடுத்த மரண வாக்குமூலத்திலும், காதலி கிரீஸ்மாவை விட்டுக் கொடுக்கவில்லை. அவர் தனக்கு விஷம் கொடுத்திருப்பார் என்று சந்தேகிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

காதலி தற்கொலை முயற்சி: போலீஸ் விசாரணையில் கிரீஸ்மா கைது செய்யப்பட்டார். நெடுமங்காடு போலீஸ் நிலையத்தில் அவர் விசாரணையில் இருந்தபோது அங்குள்ள கழிவறையில் இருந்த கிருமிநாசினியைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே ஷாரோன்ராஜின் உறவினர்களும், ஊர்க்காரர்களும் சேர்ந்து கிரீஸ்மா வீட்டில் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் அவரது வீடு சேதமானது. கிரீஸ்மா கிருமிநாசினியை குடிக்கும்போது பணியில் இருந்தஇரு பெண் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று பேர் கைது: இவ்விவகாரம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: கிரீஸ்மாவின் உடல்நிலை இப்போது சீராக உள்ளது. காதலி வீட்டில் மாம்பழச்சாறும், கசாயமும் ஷாரோன் குடித்துள்ளார். கசாயத்தில் களைக்கொல்லி மருந்தை கிரீஸ்மா கலந்திருக்கிறார். அவரது ஜாதகப்படி முதல் கணவர் இறந்துவிடுவார்.

இரண்டாவது தாரமே தங்கும் என சொன்னதால் கிரீஸ்மா இதை அரங்கேற்றியதாகச் சொல்லப்பட்டாலும் அதற்கான ஆவணங்களோ, சாட்சிகளோ இல்லை.

கிரீஸ்மாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட் டுள்ளது. இது தெரிந்தால் ஒரு வருட காலமாக ஷாரோன்ராஜ் உடன் சேர்ந்து சுற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் வெளியில் கசியவிடக்கூடும் என்ற அச்சம் கிரீஸ்மாவுக்கு இருந்தது. இதுதான் கொலைக்கான ஒற்றைக் காரணம்.

ஷாரோன் ராஜ் உடனான காதலை முறிக்க கிரீஸ்மா முயன்றுள்ளார். அது வெற்றி பெறாத தால் அவரையே கொலை செய்து காதலை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்.

இந்த விவகாரத்தில் கிரீஸ்மா வின் தாய் சிந்து, அவரது மாமா நிர்மல் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஷாரோன் ராஜை கொலை செய்ய பயன்படுத்திய விஷ பாட்டில் பறிமுதல்செய்யப்பட்டிருக்கிறது. கிரீஸ்மாவை தொடர்ந்து அவரது தாய் சிந்து, மாமா நிர்மலையும் கைது செய்துள்ளோம். இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x