Published : 04 Oct 2022 07:15 AM
Last Updated : 04 Oct 2022 07:15 AM

தாம்பரம் அருகே தம்பதி கொலை போலீஸார் தீவிர விசாரணை

தாம்பரம்: செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தை அடுத்த ஜமீன் ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (50). பூ வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி மஞ்சுளா (45). இத்தம்பதியருக்கு, ஒரு மகன் மற்றும் வசந்தி என்பவர் உள்ளிட்ட 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதில், கணவருக்கும் வசந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர் மட்டும் பெற்றோருடன் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், வசந்திக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த மோசஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பெற்றோர் வீட்டு அருகே தனியாக வீடு எடுத்து இருவரும் குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது. மதுப்பழக்கம் கொண்ட மோசஸ் குடித்துவிட்டு வந்து வசந்தியை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 30-ம் தேதி தனது 2 குழந்தைகளுடன் வசந்தி மாங்காட்டில் உள்ள அவரது சகோதரி வீட்டுக்குச் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மோசஸ் வீட்டுக்கு வருமாறும், வரவில்லை என்றால் பெற்றோரை கொன்று விடுவேன் என வசந்தியை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் வசந்தி இதை கண்டுகொள்ளாத நிலையில், கடந்த 2 நாட்களாக போன் செய்தும் பெற்றோர் போன் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து சகோதரரை மோசஸின் வீட்டுக்குச் சென்று பார்த்து வருமாறு கூறியுள்ளார்.

இதன்பேரில் நேற்று முன்தினம் இரவு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மோசஸ் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, ஆறுமுகமும் மஞ்சுளாவும் வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சிட்லபாக்கம் போலீஸார் சென்று உடல்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் சம்பவம் நடந்த 30-ம் தேதி இரவு, மோசஸ் மற்றொருவருடன் பைக்கில் வீட்டுக்கு வந்து செல்வது பதிவாகியிருந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x