Published : 15 Sep 2022 07:17 AM
Last Updated : 15 Sep 2022 07:17 AM

பொன்னேரி பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: 2-வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை

பொன்னேரி: பொன்னேரி அருகே தனியார் பள்ளி வளாகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், 2-வது நாளாக நேற்று அந்த வளாகத்தில் இருந்த 4 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே பஞ்செட்டி பகுதியில், தனியார் கல்வி குழுமத்தின் சார்பில் 4 பள்ளிகள் கொண்ட வளாகம் செயல்பட்டு வருகிறது.

இங்கு சக்திவாய்ந்த வெடிகுண்டு வைத்திருப்பதாக பள்ளியின் துணை முதல்வருக்கு வாட்ஸ் அப் மூலம் நேற்று முன்தினம் தகவல் வந்தது. இதையடுத்து, பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு சோதனை நடத்தியதில் வெடிகுண்டு எதுவும் இல்லை. வதந்தி என தெரியவந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, பள்ளி நிர்வாகி மற்றும் பொன்னேரி கோட்டாட்சியர் உள்ளிட்டோரின் செல்போன் எண்ணுக்கு, வாட்ஸ்அப் மூலம் சர்வதேச எண் ஒன்றில் இருந்து, மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

இதையடுத்து, நேற்று மாலை வரை சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த வெடிகுண்டு நிபுணர் குழுக்கள், மோப்ப நாய்களுடன் நடத்திய சோதனையிலும் வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை.

இதனால் 2-வது நாளாக, நேற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x