Published : 12 Sep 2022 02:56 PM
Last Updated : 12 Sep 2022 02:56 PM

கரூரில் ஸ்கூட்டர் மீது ஜவுளி நிறுவனப் பேருந்து மோதி விபத்து: பள்ளிச் சிறுவன் உயிரிழப்பு; தாய் படுகாயம்

கரூர்: கரூர் அருகே இன்று நடந்த விபத்தில் தாயுடன் 2 சக்கர வாகனத்தில் பள்ளிச் சென்ற சிறுவன், தனியார் ஜவுளி நிறுவன ஊழியர் பேருந்து மோதி உயிரிழந்தார். படுகாயமடைந்த தாய் மருத்துவமனையில் அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரூரை அடுத்த ஆத்தூர் பிரிவு ஜேகே நகர் 2-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (33). ஓட்டுநர். இவர் மனைவி ரம்யா (29). இவர்களின் மகன் இளவிழியன் (10). ஆண்டாங்கோவிலில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று (செப் 12) காலை ரம்யா மகன் இளவிழியனை இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

கரூர் ஈரோடு சாலையில் தனியார் பாலிடெக்னிக் அருகே சாலையை கடப்பதற்காக ரம்யா இரு சக்கர வாகனத்துடன் நின்றபோது அவ்வழியே வந்த தனியார் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவன ஊழியர்களை ஏற்றி சென்ற பேருந்து மோதியது. இதையடுத்து பேருந்து ஓட்டுநர் அங்கேயே வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடி விட்டார்.

இந்த விபத்தில், தலையில் காயமடைந்த இளவிழியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ரம்யா சிகிச்சைக்காக கரூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த கரூர் நகர போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் சடலதை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x