Last Updated : 24 Aug, 2022 10:04 PM

 

Published : 24 Aug 2022 10:04 PM
Last Updated : 24 Aug 2022 10:04 PM

ஆத்தூர் அருகே ஆறு பேர் உயிரிழந்த விபத்து: ஆம்னி பேருந்து ஓட்டுனர் கைது

கோப்புப்படம்

சேலம்: ஆத்தூர் அருகே உள்ள துலுக்கனூரில் செவ்வாய்கிழமை அதிகாலையில் வேன் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக ஆம்னி பேருந்து ஓட்டுனரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் பகுதியை சேர்ந்த ஆனந்தன் மகன் ராஜேஷ் (29). இவர் தனது தங்கை ரம்யா (25) இவர்களது சித்தப்பா மயில்வாகனம் மகள் சந்தியா (23) ஆகியோருடன் ஆத்தூர் லீ-பஜாரில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த 30-ம் நாள் துக்க காரியத்தில் கலந்து கொள்ள வந்திருந்தார். பின்னர் ராஜேஷ், ரம்யா, சந்தியா மற்றும் அவர்களின் உறவினர்களான ஆத்தூர் முல்லைவாடியை சேர்ந்த சுதாகரின் மனைவி சரண்யா (23), சந்தோஷ் குமாரின் மனைவி சுகன்யா (27), அவரது மகள் தன்ஷிகா(11), பெரியண்ணன் (23), புவனேஸ்வரி(17), கிருஷ்ணவேணி (45), உதயகுமார்(17), சுதா(35) உள்ளிட்ட 11 பேர் டீ குடிப்பதற்காக துலுக்கனூருக்கு வேனில் சென்று விட்டு மீண்டும் லீ-பஜாரில் உள்ள உறவினர் வீட்டுக்கு திரும்பினர்.

அப்போது, ஆத்தூர் சர்வீஸ் ரோட்டில் செல்ல வேனை திருப்பிய போது, அந்த வழியாக சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராஜேஷ், ரம்யா. சந்தியா, சரண்யா, சுகன்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அரசு மருத்துவமனை செல்லும் வழியில் தன்ஷிகா உயிரிழந்தார். மற்ற 5 பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த ஆறு பேரின் உடலை உறவினர்கள் ஒரே இடத்தில் தகனம் செய்தனர்.

இந்த விபத்து குறித்து ஆத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் விபத்து ஏற்படுத்திய ஆம்னி பேருந்தை ஈரோட்டை சேர்ந்த முத்துசாமி (42) என்பவர் ஓட்டி சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, முத்துசாமியை போலீஸார் கைது செய்து, விபத்து குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x