Published : 18 Aug 2022 07:12 AM
Last Updated : 18 Aug 2022 07:12 AM

சென்னை | பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை: கல்லூரி மாணவர் கைது: 5 பேர் தலைமறைவு

சென்னை: சென்னையில் பைனான்ஸ் நிறுவனத்தில்ரூ.30 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். மேலும், தலைமறைவாக உள்ள 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை வடபழனி மன்னார் முதலி 1-வது தெருவைச் சேர்ந்தவர் சரவணன்(40). இவர் வீட்டின் முதல் தளத்தில் பங்குதாரர்கள் 9 பேருடன் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் நவீன்குமார், தீபக் ஆகியோர் அலுவலகத்தில் இருந்தபோது, முகமூடி அணிந்த 6 பேர் அங்கு வந்துள்ளனர். அலுவலக கதவை உள்பக்கமாக பூட்டிய அவர்கள், அங்கிருந்த ஊழியர்களை கத்தி முனையில் மிரட்டி, லாக்கர் சாவியைக் கேட்டுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், கூச்சலிட்டனர். சப்தம் கேட்டு வந்த பைனான்ஸ் நிறுவன உரிமையாளர் சரவணன், கொள்ளையர்களை அலுவலகத்தின் உள்ளே வைத்து, வெளிப்புறமாக கதவைப் பூட்டினார். மேலும், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, வடபழனி போலீஸார் அங்கு வந்தனர்.

இதற்கிடையில், கொள்ளையர்கள் அலுவலகத்தில் இருந்த ஊழியர்களை தாக்கி, லாக்கர் சாவியைப் பிடுங்கி, அங்கிருந்த ரூ.30 லட்சத்தைக் கொள்ளையடித்தனர். மேலும், பின்புறக் கதவு வழியாக பணத்துடன் தப்பினர்.

அப்போது, சரவணன் மற்றும் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள், கொள்ளையர்களில் ஒருவரை விரட்டிப் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்னர். விசாரணையில், பிடிபட்டவர் சென்னை ஆழ்வார் திருநகர் இந்திரா நகர் 1-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த ரியாஷ் பாஷா (22) என்பதும், தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு இளங்கலை படித்து வருவதும் தெரியவந்தது. அவரைப் போலீஸார் கைது செய்தனர்.

பைனான்ஸ் நிறுவனத்தில் அதிகபணப் புழக்கம் இருப்பதை தெரிந்துகொண்ட ரியாஷ் பாஷா, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பைனான்ஸ் நிறுவனத்தில் கொள்ளையடித்துள்ளார். தலைமறைவாக உள்ள அவரது நண்பர்கள் இஸ்மாயில், பரத், கிஷோர், ஜானி, தமிழ் ஆகியோரைத் தேடி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x