Last Updated : 07 Aug, 2022 06:34 PM

 

Published : 07 Aug 2022 06:34 PM
Last Updated : 07 Aug 2022 06:34 PM

புதுச்சேரி அருகே மோதலின்போது தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு: கொலை வழக்காக மாற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி அருகே மோதலின்போது தாக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து போலீஸார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி அரியாங்குப்பம் 3-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி(27). இவருக்கும் பூமியான்பேட்டை, பாவாணர் நகரில் வசிக்கும் முருகன்(எ)சப்பி முருகன்(26) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் இரு தரப்பினரும் செல்போனில் ஒருவரையொருவர் ஆபாசமாக பேசி கொலை மிரட்டலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 3-ம் தேதி இரவு பாலாஜி அதே பகுதியைச் சேர்ந்த தனது கூட்டாளிகளுடன் பூமியான்பேட்டை, பாவாணர் நகருக்கு சென்றுள்ளார். இதனை அறிந்த சப்பி முருகன் தனது கூட்டாளிகளுடன் உருட்டுக்கட்டை, பீர்பாட்டில், கற்கள் ஆகியவற்றுடன் தயாராக இருந்த நிலையில், இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

இருப்பினும் சப்பி முருகன் கோஷ்டியினர் பாலாஜி தரப்பினை ஓட ஓட விரட்டி தாக்கினர். இதில் பாலாஜி அவரது கூட்டாளிகள் வேலா, சண்முகம் ஆகிய 3 பேரும் காயமடைந்தனர். வேலாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து தாக்குதல் நடத்திய சப்பி முருகன் உள்ளிட்டோர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வேலா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக பாலாஜி கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சப்பி முருகன் அவரது கூட்டாளிகளான அப்பாஸ், கார்த்தி, குரு, சதீஷ் ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த வேலா நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றியுள்ள போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x