Published : 01 Jul 2022 06:05 AM
Last Updated : 01 Jul 2022 06:05 AM

திருப்பத்தூர் அருகே மூதாட்டி கொலை

ராமரோஜா (கோப்புப்படம்)

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே வீட்டின் வெளியே உறங்கிக்கொண்டிருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம், செவ்வாத்துார் புதூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (67). இவரது மனைவி ராமரோஜா(58). இவர்களுக்கு புனிதா என்ற மகளும், ஏழுமலை என்ற மகனும் உள்ளனர். இருவரும் திருமணமானவர்கள். மகன் ஏழுமலை சென்னையில் கார் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.

செல்வராஜூம், ராமரோஜாவும் மருமகள் அம்சா மற்றும் 10 மாத பேத்தியுடன் ஒரே வீட்டில் வசித்தனர். செல்வராஜ் திருப்பத்தூரில் உள்ள ஒரு கடையில் இரவுநேர பாதுகாவலராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவர் பணிக்காக திருப்பத்தூர் சென்றார்.

இரவு 10 மணியளவில், ராமரோஜா வீட்டுக்குள் தனது மருமகள் மற்றும் பேத்தியை உறங்க வைத்துவிட்டு, வெளியே கதவை மூடிவிட்டு வழக்கம்போல் வீட்டின் வெளியே உள்ள திண்ணையில் உறங்கச்சென்றார்.

நேற்று காலை வெகு நேரமாகியும், வீடு திறக்காததால் வீட்டுக்குள் இருந்த அம்சா அக்கம் பக்கத்தினருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அழைத்தார்.

அவர்கள் அங்கு வந்து பார்த்தபோது, ராமரோஜா கொலை செய்யப்பட்டு கிடப்பதையும், அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் எடையுள்ள தங்கத்தாலி சரடும் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, பணி முடிந்து வீடு திரும்பிய செல்வராஜூக்கு கொலை செய்யப்பட்ட விவரம் தெரியவந்தது. இது குறித்து கந்திலி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். உடனே, சம்பவ இடத்துக்கு சென்ற கந்திலி காவல் துறையினர் ராமரோஜா உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டின் வெளியே படுத்திருந்த மூதாட்டி நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x