Published : 13 Jun 2022 06:33 AM
Last Updated : 13 Jun 2022 06:33 AM

கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வழக்கு விசாரணையின்போது கைதி திடீர் மரணம்: சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு

சென்னை: சென்னை செங்குன்றம், அடுத்த அலமாதி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் (31). இவரை, திருட்டு வழக்கு தொடர்பாக கொடுங்கையூர் போலீஸார் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.

அப்போது, அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை போலீஸார் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர், ராஜசேகர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘ராஜசேகர் மீது வியாசர்பாடி, எம்கேபி நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது. சோழவரம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார்.

திருட்டு வழக்கு விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்தபோது அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்’ என்றனர்.

ஆனால், ராஜசேகரை போலீஸார் விசாரணை என்ற பெயரில் அடித்தே கொன்று விட்டதாகவும், தொடர்புடைய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில், போலீஸ் விசாரணையின்போது விக்னேஷ் என்பவர் மரணம் அடைந்தார். இந்த விவகாரம் தொடர்பாக 6 போலீஸார் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கைதி இறந்தது குறித்த விசாரணை சிபிசிஐடி போலீஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x