Published : 06 Jun 2022 07:31 AM
Last Updated : 06 Jun 2022 07:31 AM

சென்னையில் 71 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்: ஒரே வாரத்தில் 182 பேரை கைது செய்த போலீஸார்

சென்னை: சென்னையில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு ஒரே வாரத்தில் 71 கிலோ குட்கா புகையிலையை பறிமுதல் செய்து 182 பேரை கைது செய்துள்ளனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை மூலம் சிறப்பு சோதனைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஒவ்வொரு காவல் நிலைய எல்லைகளில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீஸார் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக தனிப்படையினர் கடந்த மாதம் 29-ம் தேதி முதல் கடந்த 4-ம் தேதி வரையிலான 7 நாட்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, புகையிலைப் பொருட்களை கடத்தி வருதல், பதுக்கி வைத்து விற்பனை செய்தல் தொடர்பாக 181 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். 182 பேரைக் கைது செய்துள்ள போலீஸார் 71.612 கிலோ எடை கொண்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 31 கிலோ 850 கிராம் மாவா மற்றும் ரூ.2,730 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

குறிப்பாக, திருவிக நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் கடந்த 1-ம் தேதி அப்பகுதியில் குட்கா புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த மாலதி (56) என்பவரை கைது செய்து 5.8 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x