Published : 05 Jun 2022 06:05 AM
Last Updated : 05 Jun 2022 06:05 AM

ஊர் பஞ்சாயத்து தீர்ப்பின்படி மகனை கொன்ற தந்தை - 16 பேரை கைது செய்த ஆந்திர போலீஸார்

அமராவதி: ஆந்திர மாநிலம், மன்யம் மாவட்டம், சீத்தம்பேட்டா ஏஜென்சி பகுதியில் சவாரா இனத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மே 27-ம் தேதி ரேகுல பாடு என்ற இடத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் சவாரா சிங்கண்ணா என்கிற மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர், பத்மாவதி என்ற பெண்ணுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது பிரச்சினையில் தலையிட்ட பத்மாவதியின் தந்தை கயாவை, சிங்கண்ணா ஒரு கட்டையால் தாக்கியுள்ளார். இதில் கயா அதே இடத்தில் உயிரிழந்தார்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடையச் செய்தது. உடனே ஊர் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. இதில் இரு தரப்பினரையும் விசாரித்த ஊர் பஞ்சாயத்தார், உசிரிகி பாடு கிராமத்தை சேர்ந்த சிங்கண்ணாவை அவரது குடும்பத்தினரே கொல்ல வேண்டும் என்றும் அதுவரை கயாவின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யக் கூடாது என்றும் தீர்ப்பளித்தனர்.

இதையடுத்து சிங்கண்ணாவை, அவரது தந்தை, இருசகோதரர்கள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து, அறையில் அடைத்தனர். சிங்கண்ணாவுக்கு குடிக்க விஷம் வழங்கினர். அதை குடித்தும் அவர் இறக்கவில்லை. இதையடுத்து சிங்கண்ணாவை தூக்கிலிட்டு கொன்றனர். அதன் பின்னர் இரு உடல்களையும் மே 29-ம்தேதி கிராமத்தில் தகனம் செய்தனர்.

இதனை சிலர் செல்போனில் வீடியோ எடுத்ததை தொடர்ந்து, இந்த சம்பவம் பால கொண்டா போலீஸாருக்கு தெரிய வந்தது. டிஎஸ்பி ஸ்ராவணி தலை மையிலான போலீஸார் சென்று விசாரணை நடத்தினர்.

இதையடுத்து கொலையில் தொடர்புடைய சிங்கண்ணாவின் தந்தை, இரு சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் என மொத்தம் 16 பேரை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x