Published : 01 Jun 2022 06:54 AM
Last Updated : 01 Jun 2022 06:54 AM

கரூர் | சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

உமர்முக்தர்

கரூர்: கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், டைல்ஸ் ஒட்டும் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள விராலிப்பட்டியைச் சேர்ந்தவர் உமர்முக்தர் (47). இவர் தனது 3 மனைவிகளையும் பிரிந்து, கடந்த 5 ஆண்டுகளாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள சின்னதாராபுரம் முதலியார் தெருவில் தங்கி, டைல்ஸ் ஒட்டும் வேலைக்குச் சென்று வந்தார்.

இதனிடையே, கடந்தாண்டு செப்.7-ம் தேதி, 5 வயது சிறுமிக்கு உமர்முக்தர் பாலியல் தொல்லைக் கொடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சின்னதாராபுரம் போலீஸார், போக்ஸோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த கரூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பாணு, சிறுமியைக் கடத்திய குற்றத்துக்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அதைக் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனையும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக போக்ஸோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அதைக் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனையும் வழங்கி, தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நேற்று உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீட்டை இந்தத் தீர்ப்பின் நகல் கிடைக்கப் பெற்ற 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x