Published : 28 May 2022 06:36 AM
Last Updated : 28 May 2022 06:36 AM

கோவை மாவட்டம் முழுவதும் கடந்த 2 மாதங்களில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் 1,378 வழக்குகள் பதிவு: காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தகவல்

கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்பாக 1,378 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,516 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்தார்.

கோவை மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களிடம் இருந்து செல்போன்கள் காணாமல் போனதாகவும், திருட்டுப் போனதாகவும் காவல் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். கடந்த 2 மாதங்களில் மொத்தம் 130 செல்போன்கள் மீட்கப்பட்டன. அவற்றை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் சுகாசினி, ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மீட்கப்பட்ட செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்த பின்பு காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 2 மாதங்களில் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் அடிப்படையில் 130 செல்போன்கள் மீட்கப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.19.50 லட்சம் ஆகும். மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் கஞ்சா விற்பனை தொடர்பாக 71 வழக்குகள் பதியப்பட்டு, 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.17.12 லட்சம் மதிப்புள்ள 172 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருட்களை விற்றது தொடர்பாக 169 வழக்குகள் பதியப்பட்டு, 178 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.20.55 லட்சம் மதிப்புள்ள 2,678 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மதுவிலக்கு குற்றங்கள் தொடர்பாக 1,192 வழக்குகள் பதியப்பட்டு, 1,206 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 4,900 லிட்டர் மதுபானங்கள், 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 25 வழக்குகள் பதியப்பட்டு, 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் மற்றும் சட்டம் ஒழுங்குக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட 5 பேர், குற்ற வழக்குகளில் ஈடுபட்ட ஒருவர் என மொத்தம் 6 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்பாக 1,378 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,516 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x