Published : 28 May 2022 06:41 AM
Last Updated : 28 May 2022 06:41 AM

மலேசியாவில் மர்மமான முறையில் இறந்த கணவர்: உடலை கொண்டு வர சிவகங்கை ஆட்சியரிடம் மனைவி மனு

மலேசியாவில் மர்மமான முறையில் கணவர் இறந்தது குறித்து விசாரிக்கக்கோரி சிவகங்கை ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த மனைவி செந்திலா. (உள்படம்) மோகன சுந்தரம்.

சிவகங்கை: மானாமதுரை கிருஷ்ணராஜ புரத்தைச் சேர்ந்தவர் மோகன சுந்தரம் (38). இவரது மனைவி செந்திலா. இவர்களது மகன் ரியாஸ் (16) பிளஸ் 1 மாணவர். மகள் கனிஷ்கா (14) ஒன்பதாம் வகுப்பு மாணவி. குடும்ப வறுமையால் 2018-ம் ஆண்டு மலேசியா நாட்டுக்கு மோகனசுந்தரம் வேலைக்குச் சென்றார்.

அங்கு கார் ஓட்டுநர் பணிக்காக சென்ற மோகனசுந்தரத்துக்கு கார் சுத்தம் செய்யும் பணியை வழங்கி உள்ளனர். முறையாக ஊதியமும் வழங்கவில்லையெனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த மே 21-ம் தேதி மோகனசுந்தரம், தனது மனைவியை மொபைலில் தொடர்புகொண்டு, தான் பணிபுரியும் நிறுவனத்தினர் தன்னை தாக்கி கொடுமைப்படுத்து வதாக கூறியுள்ளார். இந்நிலையில் மே 24-ம் தேதி செந்திலா தனது கணவரை மொபைலில் தொடர்பு கொண்டார். ஆனால் மொபைலை மோகனசுந்தரம் எடுக்கவில்லை. மேலும் அவர் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளர் பாண்டி எடுத்து பேசினார். அப்போது மோகனசுந்தரம் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகக் கூறி இணைப்பை துண்டித்தார்.

அதன் பிறகு மே 25-ம் தேதி மோகனசுந்தரம் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக செந்திலாவிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மர்மமான முறையில் தனது கணவர் இறந்தது குறித்து விசாரிக்க வேண்டும். மேலும் அவரது உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் கண்ணீருடன் மனு அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x