Published : 11 May 2022 07:54 AM
Last Updated : 11 May 2022 07:54 AM

கணவர் வீட்டில் கழிப்பறை இல்லாததால் கடலூரில் புதுப்பெண் தற்கொலை: காதலித்து மணமுடித்த ஒரு மாதத்தில் சோகம்

ரம்யா

கடலூர்: கணவர் வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் அவருடன் ஏற்பட்ட தகராறில், கடலூரில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (30). தனியார் நிறுவன ஊழியர். அரிசிபெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜ் மகள் ரம்யா(27). இவர்கள் 2 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த மாதம் 6-ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுஉள்ளது. இதனால் தனது தாயார் வீட்டில் இருந்த ரம்யா நேற்று முன்தினம் தூக்குப் போட்டுக் கொண்டார். அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் மஞ்சுளா, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு, புதுச்சேரி ஜிப்மர்மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து மஞ்சுளா கொடுத்தபுகாரின்பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் நேற்று முன்தினம் இரவு வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர்.

அதில், ‘கார்த்திகேயன் வீட்டில்கழிப்பறை வசதி இல்லாததால் தகராறு ஏற்பட்டு, அரிசிபெரியாங்குப்பத்தில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு ரம்யா வந்துள்ளார். வேறுஇடத்தில் வீடு பார்த்துவிட்டு அழைத்துச் செல்வதாக ரம்யாவிடம் கார்த்திகேயன் கூறியிருந்தார்.

ஆனால், சொல்லியபடி கார்த்திகேயன் வீடு பார்க்கவில்லை. இது சம்பந்தமாக போனில் பேசிய கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம்உடைந்த ரம்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்’ என தெரியவந்துள்ளது. திருமணமாகி ஒரு மாதமே ஆவதால் இத் தற்கொலை தொடர்பாக கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x