Published : 04 May 2022 06:38 AM
Last Updated : 04 May 2022 06:38 AM

மறைமலை நகர் | ஓடும் ரயிலில் துணிகரம்: கத்தியால் தாக்கி பயணியிடம் செல்போன் பறித்த கும்பல்

மறைமலை நகர்: தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் தாக்கிவிட்டு விலை உயர்ந்த செல்போன்களை பறித்துச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ரயில் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் வெம்பாக்கம் கே.கே.நகர், அறிஞர் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன்(31) தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்றுவிட்டு செங்கல்பட்டுக்கு வருவதற்காக கிண்டி ரயில் நிலையத்தில் ரயில் ஏறினார்.

மறைமலை நகர் ரயில் நிலைய நடைமேடைக்குள் ரயில் வந்தபோது மணிகண்டன் மட்டும் அவர் பயணித்த ரயில் பெட்டியில் இருந்துள்ளார்.

அப்போது மணிகண்டனுடன் அதே பெட்டியில் பயணித்த அடையாளம் தெரியாத இளைஞர்கள் சிலர் மணிகண்டனை கத்தியால் தாக்கிவிட்டு, விலை உயர்ந்த செல்போன்களை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இதில், காயமடைந்த மணிகண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் ரயில்வே போலீஸார் விசாரிக்கின்றனர்.

தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்களில் சமீப காலமாக செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக ரயில் புறப்படும் நேரத்தில் செல்போனை பறிக்கின்றனர். இதனால் ரயில் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். ஓடும் ரயில்களில் பயணிகளை ஏமாற்றி நடைபெறும் குற்றச்செயல்களைத் தடுப்பதில் போலீஸார் அதிக கவனம் செலுத்த வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x