Published : 02 May 2022 07:51 AM
Last Updated : 02 May 2022 07:51 AM

நாமக்கல் அருகே 10 வயது சிறுமி கடத்தல்: மர்ம நபர்களைப் பிடிக்க 6 தனிப்படை

நாமக்கல்: நாமக்கல் அருகே கடத்திச் செல்லப்பட்ட 10 வயது சிறுமியை தனிப்படை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

நாமக்கல் - துறையூர் சாலை அலங்காநத்தம் அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (34). விவசாயி. இவருக்கு கவுசல்யா (27) என்ற மனைவியும், 14 வயதில் மகனும், 10 வயதில் மகளும் உள்ளனர். நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் மகள் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் சரவணன் உள்ளிட்ட நால்வரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 2 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் மகளை மட்டும் கடத்திச் சென்றுவிட்டனர். அதிகாலையில் மகள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் எருமப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

விசாரணையில், குழந்தையின் பெற்றோரிடம் கடத்தல் கும்பல் பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது. குழந்தையை மீட்க நாமக்கல் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தனிப்படையினர் குழந்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x