Published : 02 May 2022 06:24 AM
Last Updated : 02 May 2022 06:24 AM

திருவண்ணாமலை விசாரணை கைதி உயிரிழப்பு: சிபிசிஐடி விசாரணை விரைவில் தொடங்குகிறது

தங்கமணி. (கோப்புப்படம்)

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் விசாரணை கைதி உயிரிழந்தது குறித்து சிபிசிஐடி விசாரணை விரைவில் தொடங்க உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் இளையாங்கண்ணி அருகே உள்ள தட்டரணை கிராமத்தில் வசித்தவர் தங்கமணி. இவர், சாராயம் காய்ச்சி பதுக்கி வைத்திருந்ததாக, தி.மலை மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டு கடந்த 26-ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். அவரது உடல்நிலை மறுநாள் (27-ம் தேதி) பாதிக்கப்பட்டு, தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அன்றிரவு உயிரிழந்தார்.

இந்நிலையில், ரூ.2 லட்சம் கொடுக்க மறுத்ததால் தங்கமணியை காவல்துறையினர் மற்றும் சிறைத்துறையினர் அடித்து கொலை செய்து விட்டனர் என உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். மேலும் அவர்கள், மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட உடலை பெற்றுக் கொள்ள 4-வது நாளாக நேற்றும் மறுத்துவிட்டனர்.

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தால், வலிப்பு நோய் ஏற்பட்டு தங்கமணி உயிரிழந்துவிட்டதாக காவல்துறை அதிகாரிகள் கூறி வந்த நிலையில், தி.மலை மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ராஜன், ஆய்வாளர் நிர்மலா உட்பட 4 பேர், காத்திருப்போர் பட்டியலுக்கு நேற்று முன் தினம் மாற்றப்பட்டனர்.

இதற்கிடையில், விசாரணை கைதி உயிரிழப்பு குறித்து சிபிசிஐடிவிசாரணைக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சிபிசிஐடியின் விசாரணை ஓரிரு நாட்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தட்டரணையில் உள்ள தங்கமணி வீடு, தி.மலை மதுவிலக்கு அமல்பிரிவு நிலையம், கிளை சிறை மற்றும் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், மதுவிலக்கு காவல் அதிகாரிகள், தங்கமணியின் குடும்பத்தினர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x