Published : 28 Apr 2022 06:43 AM
Last Updated : 28 Apr 2022 06:43 AM

பெரம்பலூர் | சொகுசு காரில் வந்து ஆடு திருடிய 2 இளைஞர்கள் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் நக்கசேலம் கிராமத்தைச் சேர்ந்த சிவபாலன் என்பவருக்கு சொந்தமான 3 ஆடுகள், அதே கிராமத்தைச் சேர்ந்த தென்னரசு என்பவருக்கு சொந்தமான 7 ஆடுகள் என மொத்தம் 10 ஆடுகள் நேற்று முன்தினம் காணாமல் போனது. இதுகுறித்து இருவரும் பாடாலூர் போலீஸில் புகார் செய்திருந்தனர்.

இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த நகர காவல் நிலைய போலீஸார், சந்தேகத்தின்பேரில் அவ்வழியாக வந்த ஒரு சொகுசு காரை சோதனையிட்டனர். அப்போது அந்த காரில் 10 ஆடுகள் இருந்தன. காரில் வந்தவர்களிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆடுகளை திருடி, காரில் கடத்திக் கொண்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சொகுசு காரில் சென்று ஆடுகளைத் திருடிய தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மணியம்பாடி கலைஞர் நகரைச் சேர்ந்த சேகர் மகன் வினோத் கண்ணன்(27), மூக்கனூர் அண்ணாநகரைச் சேர்ந்த பாலு மகன் சுரேஷ்(33) ஆகிய இருவரையும் கைது செய்து, பாடாலூர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பாடாலூர் போலீஸார் இருவரையும் நேற்று பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x