மதுரை | ஆசிரியைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தலைமை ஆசிரியர் கைது

மதுரை | ஆசிரியைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தலைமை ஆசிரியர் கைது
Updated on
1 min read

மதுரை: உடன் பணியாற்றிய ஆசிரியைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தலைமை ஆசிரியர் ஒருவர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை கீரைத்துறை பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் ஜெயசீலன்(55). அப்பகுதியிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார். சில மாதத்திற்கு முன்பு இந்த பள்ளிக்கு வேறொரு அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து பணிநிரவல் மூலம் இரண்டு ஆசிரியைகள் மாறுதலாகி வந்தனர். அவர்கள் பள்ளி அலுவல், மாணவர்களுக்கான தேவை தொடர்பாக தலைமை ஆசிரியரை அணுகிய போது, அவர்களிடம் தவறான வகையில் பழக ஜெயசீலன் முயற்சித்ததாக கூறப்படுகிறது. அதனை இரண்டு ஆசிரியைகளும் கண்டித்து, அவரை எச்சரித்துள்ளனர்.

ஆனாலும், அவர் நிலைப்பாடு மாறவில்லை என்பதால் வேறு வழியின்றி இரண்டு ஆசிரியைகளும் பணி மாறுதல் கேட்டு மதுரை மாவட்ட கல்வித்துறை அதிகாரியிடம் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு முறைப்படியான மாறுதல் உத்தரவு கிடைத்தும், இருவரையும் பணியில் இருந்து விடுவிக்காமல் ஜெயசீலன் தாமதம் செய்துள்ளார். இதற்கிடையில் இரண்டு ஆசிரியைகளில் ஒருவர் கடந்த 2 மாதத்திற்கு முன்பு, ஜெயசீலனுக்கு எதிராக மதுரைநகர் மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தார். இது பற்றி தெரிந்த ஜெயசீலன், முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றம் மதுரை கிளையை அணுகினார். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஜெயசீலனை காவல் துணை ஆணையர் தங்கத்துரை தலைமையிலான தனிப்படையினர் தொடர்ந்து தேடிவந்தனர். அவரது செல்போன் சிக்னல் மூலம் கண்காணித்தனர். கோவை அவினாசி பகுதியில் அவர் பதுக்கி இருப்பது தெரிந்து போலீசார் அங்கு சென்றனர். இருப்பினும், அவர் மதுரைக்கு தப்பி வந்தது தெரிய வந்தது. மதுரை மகால் பகுதியிலுள்ள பந்தடி தெருவில் ஒரு வீட்டில் பதுக்கியிருந்த ஜெயசீலனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in