Published : 28 Feb 2022 06:30 AM
Last Updated : 28 Feb 2022 06:30 AM

தி.மலை: மான் வேட்டையாடிய 2 இளைஞர்கள் கைது

திருவண்ணாமலை அருகே மான்களை வேட்டையாடிய வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள்.

திருவண்ணாமலை: தி.மலை அடுத்த அடி அண்ணாமலையில் உள்ள வனப்பகுதியில், தி.மலை வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இரண்டு புள்ளி மான்களை வேட்டையாடி, 3 இரு சக்கர வாகனங்களில் 4 பேர் எடுத்து வந்துள்ளனர். அவர்களை வனத்துறையினர் தடுத்து நிறுத்தியதில், இரு சக்கர வாகனங்கள் மற்றும் வேட்டையாடப்பட்ட மான்களை போட்டுவிட்டு 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். மேலும் இருவர் மட்டுமே சிக்கினர். அவர்களிடம் வனத் துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், திருவண்ணாமலை அடுத்த கொண்டம் பகுதியில் வசிக்கும் படையப்பா(23) மற்றும் திருவண்ணாமலை பல்லவ நகரில் வசிக்கும் தீபராஜ்(28) ஆகியோர் என்பதும், தப்பித்து ஓடியவர்கள் கொண்டம் பகுதியில் வசிக்கும் பிரகாஷ்(26), சீனு(24) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதில் தீபராஜ் என்பவர், மான் கறி வாங்க வந்தவர் என கூறப்படுகிறது. இது குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து படையப்பா மற்றும் தீபராஜை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வேட்டையாடப்பட்ட இரண்டு புள்ளி மான்கள் மற்றும் 3 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x