Published : 29 Jan 2022 07:18 AM
Last Updated : 29 Jan 2022 07:18 AM

சென்னையில் மது போதையில் மகளிடம் தவறாக நடக்க முயன்ற கணவரை சுத்தியலால் அடித்துக் கொன்ற மனைவி

சென்னை: மது போதையில் மகளிடம் தவறாக நடக்க முயன்ற கணவரை, அவரது மனைவி சுத்தியலால் அடித்துக் கொலை செய்துள்ளார். இதுகுறித்து ஓட்டேரி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை ஓட்டேரி புதிய வாழை மாநகர் 9-வது தெருவைச் சேர்ந்த வர் பிரதீப் (43). இவரது மனைவி பிரீத்தா (41). இவர்களுக்கு 20 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனர். மகள் சென்னையில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப் படிப்பும், மகன் 6-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

பிரதீப் மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர் என்றும், வேலைக் குச் செல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பிரதீப் மது போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மனைவி, மகள், மகன் ஆகியோர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். இரவு 11 மணியளவில் தனது மகளிடம் பிரதீப் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மகள் கூச்சலிட்டுள்ளார். அலறல் சப்தம் கேட்டு கண் விழித்த பிரீத்தா, கணவரின் செயலால் வேதனை அடைந்துள்ளார்.

அவரது செயலை சுட்டிக் காட்டி கண்டித்துள்ளார். இது தொடர்பாக இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த பிரீத்தா, வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து, கணவர் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த பிரதீப், அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தகவலறிந்து வந்த ஓட்டேரி போலீஸார், பிரதீப்பின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், பிரீத்தாவை கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x