Published : 14 Jan 2022 06:53 AM
Last Updated : 14 Jan 2022 06:53 AM

திருப்பத்தூர்: நிலத்தகராறில் முன் விரோதம்- சகோதரரை கொலை செய்த தம்பி

திருப்பத்தூர் அருகே சகோதரரை வெட்டிக் கொலை செய்த தம்பியை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.

திருப்பத்துார் மாவட்டம் கந்திலி அடுத்த ஆவல்நாயக்கன்பட்டி சோலச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜூனன். இவரது மகன்கள் கோவிந்தராஜன்(42), கனகராஜ் (40). இருவருக் கும் திருமணமாகி ஒரே வீட்டில் அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், சகோதரர்களுக்கு இடையே நிலம்சம்பந்தமாக ஏற்கெனவே முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.நேற்று முன்தினம் இரவு கனகராஜின் மனைவி பூங்கொடி வீட்டின் முன்பு அக்கம், பக்கத்தினரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, மதுபோதையில் அங்கு வந்த கோவிந்த ராஜ், தம்பி மனைவி என்றும் பாராமல் பூங்கொடியை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கனகராஜ் அரிவாளை எடுத்து வந்து சகோதரரை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து கோவிந்தராஜியின் மனைவி கவுரம்மாள் கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், கந்திலி காவல் ஆய்வாளர் தேவேந்திரன் மற்றும் காவல் துறையினர் அங்குச்சென்று கோவிந்தராஜியின் உடலை மீட்டு திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கந்திலி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சகோதரரை வெட்டி கொலை செய்த கனகராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x