Published : 13 Jan 2022 12:12 PM
Last Updated : 13 Jan 2022 12:12 PM

10 மாத ஆண் குழந்தை ரூ.3 லட்சத்துக்கு விற்பனை: தாய், இடைத்தரகர் உட்பட 3 பெண்கள் கைது

செங்குன்றம்: செங்குன்றத்தில் 10 மாத ஆண் குழந்தை ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது தொடர்பாகத் தாய், இடைத்தரகர் உட்பட 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, ராயபுரத்தில் இயங்கி வரும் குழந்தைகள் நலக் குழுமம் உறுப்பினரான லலிதா(49) என்பவருக்கு, சென்னையை சேர்ந்த குழந்தை ஒன்று விற்பனை செய்யப்பட்டு, அக்குழந்தை ஆந்திராவில் வளர்கிறது என்ற ரகசியத் தகவல் கிடைத்தது.

அத்தகவலின் பேரில் ஆந்திர மாநிலம், புத்தூரில் ஆய்வுநடத்திய லலிதாவுக்கு, சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் குழந்தையை விலைக்கு வாங்கிய செங்குன்றத்தைச் சேர்ந்த நவநீதம்(69) என்ற பெண், அக்குழந்தையை அங்கு வளர்த்து வந்தது தெரியவந்தது.

அந்த குழந்தையை மீட்ட லலிதா நடத்திய தொடர் விசாரணையில் தெரிய வந்ததாவது:

சென்னை, கண்ணகி நகர் 23-வது தெருவைச் சேர்ந்தவர்கள் சின்னதுரை- விஜயலட்சுமி(30) தம்பதி. இத்தம்பதியினரின் 10 மாதஆண் குழந்தை நித்தின் ராஜைவறுமையின் காரணமாக, திருவள்ளூர் மாவட்டம், நாரவாரிகுப்பம், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த இடைத்தரகரான தங்கம்(42) என்பவரிடம் தாய் விஜயலட்சுமி கடந்தஆண்டு ஜூலையில் ரூ.85 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளார்.

அக்குழந்தையை, தங்கம் தன் ஆண் நண்பர் ஒருவர் மூலம் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நவநீதத்திடம் ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

இது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்த செங்குன்றம் போலீஸார், குழந்தையின் தாய் விஜயலட்சுமி, தங்கம் மற்றும் நவநீதம் ஆகிய பெண்களை நேற்று கைது செய்தனர். மேலும், தங்கத்தின் ஆண் நண்பரை போலீஸார் தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட குழந்தை சென்னை, அண்ணாநகரில் உள்ள குழந்தைகள் நலக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x