Last Updated : 21 Aug, 2021 11:15 AM

 

Published : 21 Aug 2021 11:15 AM
Last Updated : 21 Aug 2021 11:15 AM

விருதுநகரில் பெண் ஏட்டு கொலை: கணவரிடம் தீவிர விசாரணை

விருதுநகரில் பெண் ஏட்டு ஒருவர் நேற்று இரவு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கணவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை மேடு பகுதியை சேர்ந்தவர் பானுப்பிரியா (31). விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவரது கணவர் விக்னேஷ் (37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இளைய மகன் முதுகுளத்தூரில் உள்ள பானுப்பிரியாவின் தாய் வீட்டில் தங்கி படித்து வருகிறார்.

விக்னேஷ் மதுரை பழங்கானத்தத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். பழங்கானத்தத்தில் விக்னேஷுக்கு சொந்தமாக ஏழு வீடுகள் உள்ளன. அவரது பெற்றோரும் அப்பகுதியில் வசித்து வருகின்றனர். அதனால் பானுபிரியாவை மதுரைக்கு இடம் மாறுதல் கேட்டு வருமாறு விக்னேஷ் வற்புறுத்தி வந்துள்ளார்.

இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10.30 மணி அளவில் பணி முடிந்து ஏட்டு பானுபிரியா வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த விக்னேஷுக்கும் பானுபிரியாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. சற்று நேரத்தில் பானுப்பிரியா வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் தனது பெல்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக விக்னேஷ் உறவினர்களுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆனால் பானுப்பிரியா கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதை அறிந்த சூலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

முதல் கட்ட விசாரணையில் ஏட்டு பானுபிரியா தற்கொலை செய்துகொள்ளவில்லை என்பதும் குடும்ப தகராறு காரணமாக விக்னேஷ் தனது மனைவி பானுபிரியாவை பெல்டால் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்தது.

அதையடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விக்னேஷை காவல் நிலையம் அழைத்து வந்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x