Last Updated : 24 Mar, 2021 12:57 PM

 

Published : 24 Mar 2021 12:57 PM
Last Updated : 24 Mar 2021 12:57 PM

தேர்தல் பணிக்காக சேலம் வந்த சிஐஎஸ்எஃப் வீரர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை முயற்சி

தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக சேலம் வந்த மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர், ஏகே 47 மெஷின் கன்னால் சுட்டுத் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து கடந்த மாதம் 28-ம் தேதி மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரர்கள் 183 பேர் சேலம் வந்தனர். இவர்கள் சேலம் லைன்மேடு ஆயுதப்படை மைதானம் மற்றும் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள முகாம்களில் தங்கி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை லைன்மேடு ஆயுதப்படை மைதானக் காவலர் சமுதாயக் கூடத்தில் தங்கியிருந்த வீரர் ஆஷிஸ் குமார் புட்டியா (30) என்பவர், தன்னிடமிருந்த மெஷின் கன் எனப்படும் ஏகே 47 நவீன ரகத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனைக் கண்ட சக வீரர்கள் உடனடியாக அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆஷிஸ் குமார் புட்டியா

தாடைப் பகுதியில் பலத்த காயமடைந்த ஆஷிஸ் குமார் புட்டியாவுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த சேலம் மாநகரக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒடிசாவைச் சேர்ந்த ஆஷிஸ் குமார் புட்டியா, குடும்பப் பிரச்சினை காரணமாகத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x