மேலூரில் பார்வர்டு பிளாக் கட்சியின் செயலர் வெட்டிக் கொலை: நண்பர்களே கொலை செய்த கொடூரம் 

மேலூரில் பார்வர்டு பிளாக் கட்சியின் செயலர் வெட்டிக் கொலை: நண்பர்களே கொலை செய்த கொடூரம் 
Updated on
1 min read

மேலூர் அருகே வெள்ளரிப்பட்டியில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்டச் செயலர் முத்துக்குமரன் என்பவரை நண்பர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர் அருகிலுள்ள வெள்ளரிப்பட்டியைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மகன் முத்துக்குமரன் (37). இவர் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் மதுரை தெற்கு மாவட்டச் செயலராக இருந்தார்.

இவர் தனது வயல் பகுதியில் கோழிப் பண்ணை நடத்தினார். இங்கு மதுரை யாகப்பா நகரைச் சேர்ந்த மாரியப்பன் உள்ளிட்ட அவரது நண்பர்கள் அடிக்கடி வந்து மது அருந்திவிட்டு பேசிக்கொண்டிருப்பது வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இது போன்ற செயலை விரும்பாத முத்துக்குமரன், மது அருந்துவதை தவிர்க்குமாறு தனது நண்பர்களுக்கு பலமுறை அறிவுறுத்தி கண்டித்தும் இருக்கிறார்.

இந்நிலையில், தீபாவளியொட்டி நேற்று முன்தினம் மாரியப்பன் உள்ளிட்ட அவரது நண்பர்கள் 5 பேர் முத்துக்குமாரனின் கோழிப் பண்ணைக்கு சென்றுள்ளனர்.

மது அருந்திய அவர்கள் இரவில் அங்கே தங்கியுள்ளனர். அப்போது, முத்துக்குமரனுக்கும், நண்பர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, அது தகறாராக மாறியிருக்கிறது.

ஆத்திரம் அடைந்த நண்பர்கள் முத்துக்குமரனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியது தெரியவந்தது.

இது குறித்து இன்று காலை தகவல் அறிந்த மேலூர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் உடலைக் கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலூர் டிஎஸ்பி ரகுபதி ராஜா தலைமையிலான தனிப்படை போலீஸார் கொலையாளி களை தேடுகின்றனர். இதற்கிடையில் மதுரை கோரிப்பாளையத்தில் முத்துக்குமரன் உறவினர்கள், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் திடீர் சாலை மறியல் செய்தனர்.

கொலையாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தினர். துரித நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீஸார் உறுதியளித்ததால் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in