Published : 20 Oct 2020 12:12 PM
Last Updated : 20 Oct 2020 12:12 PM

பழனியில் இளைஞர் தற்கொலை: காவல்துறையைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்

பழனியில் குடும்பப் பிரச்சினைக்குக் காரணமாக இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதற்கு காவல்துறையின் ஒருதலைபட்சமான விசாரணையே காரணம் எனக் கூறி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெரிய கலையமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இம்ரான்கான் (28) என்பவருக்கும் ஆயக்குடியைச் சேர்ந்த முன்சல்மா என்ற சோபி என்பவருக்கும் கடந்த ஓன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும்‌ இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு கடந்த இரண்டு மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதுதொடர்பாக இம்ரான்கான் மீது அவரது மனைவி முன்சல்மா கொடுத்த புகாரின்பேரில் பழனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று இரவு இம்ரான்கான் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறந்தவரின்‌ உடலைமீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இம்ரான் கான் மரணத்திற்கு பழனி அனைத்து மகளிர் காவ்லநிலைய ஆய்வாளர் தேன்மொழியும், ஒருதலைபட்சமான விசாரணையுமே காரணம் என்று கூறி உறவினர்கள்‌ திடீர்‌ சாலைமறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் தெரிவித்ததாவது: குடும்பப் பிரச்சினை காரணமாக மகளிர் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இம்ரான்கான் அழைக்கப்பட்டார்.

விசாரணைக்கு சென்றபோது அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் தேன்மொழி ஒருதலைபட்சமாக நடந்துகொண்டதாகவும், விசாரணையின் போது போலீஸார் முன்னிலையில் மனைவியின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இம்ரான்கானை தாக்கினர்.

அதைத் தடுக்காமல் ஆய்வாளர் தேன்மொழி வேடிக்கை பாரத்ததாகவும் தெரிவித்தனர். ஒருதரப்பினரிடம் பணம் வாங்கிக்கெண்டு ஒருதலைப்பட்சமாக விசாரணை செய்தது மட்டுமல்லாமல், மனைவியின் குடும்பத்தினர் முன்னிலையில் அவமதித்ததால் மனமுடைந்த இம்ரான்கான் தற்கொலை செய்துகொண்டதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீதும், போலீஸார் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மறியல் குறித்து தகவலறிந்த போலீஸார் போராட்டக்காரர்களிடம் பேச்சாவார்த்தை நடத்தி தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x