மதுரையில் 9 மாத குழந்தை சட்டவிரோத தத்தெடுப்பு: தம்பதியர் மீது நடவடிக்கை

மதுரையில் 9 மாத குழந்தை சட்டவிரோத தத்தெடுப்பு: தம்பதியர் மீது நடவடிக்கை
Updated on
1 min read

மதுரையில் 9 மாத ஆண் குழந்தை சட்டவிரோதமாக தத்தெடுத்தது தொடர்பாக இரு தம்பதியர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மதுரை செல்லூர் போஸ் வீதியைச் சேர்ந்தவர் ராபர்ட். இவரது மனைவி மேரி. இந்த தம்பதியருக்கு ஏற்கெனவே 3-வயதில் பெண் குழந்தை இருக்கும் நிலையில், கடந்த 7 மாதத்திற்கு முன்னதாக் ஆண் குழந்தை ஒன்று மேரிக்கு பிறந்தது.

அக்குழந்தை அதே பகுதியிலுள்ள ஷாஜகான்- நாகூரம்மாள் தம்பதியருக்கு சட்ட விரோதமாக தத்துக் கொடுத்து இருப்பதாக மதுரை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டிராஜன், குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூகப்பணியாளர் அருண்குமார், செல்லூர் காவல் ஆய்வாளர் கோட்டைசாமி விசாரித்தனர்.

இந்த விசாரணையில், இரு தரப்பிலும் எழுத்துப்பூர்வ ஒப்பந்த அடிப்படையில் சட்டவிரோதமாக குழந்தையை தத்து எடுத்திருப்பது தெரிந்தது. குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டியராஜன் கொடுத்த புகாரின்பேரில், போலீஸார் அந்தக் குழந்தையை நேற்று செல்லூரில் வைத்து மீட்டனர்.

கருமாத்தூரிலுள்ள அரசு குழந்தை காப்பகத்திற்கு அக்குழந்தையை அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக இரு தம்பதியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in